நல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்

கிராமப்புறங்களில் பசுமை இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை என்பது எட்டாக்கனிதான். நகர்ப்புற வீடுகள் கான்கிரீட் வனங்களாகிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை.
எனவேதான் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், வராந்தா, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
உயர்தட்டு மக்கள், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து தரப்பிலும் இவற்றை வைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மக்களிடையே வரவேற்பு அதிகம் இருப்பதால்,நர்சரி தோட்டம் வளர்ப்புத் தொழில் நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.
நர்சரி என்றால் தமிழில் நாற்றுப்பண்ணை என்று பொருள். செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு இந்த நர்சரி கார்டன் தொழிலை நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம்.
வருடம் முழுவதும் வருமானம் தரக்கூடிய நர்சரி கார்டன் தொழிலுக்கு பெரிய அளவில் முன் அனுபவம் தேவையில்லை.
அருகில் உள்ள தோட்டக்கலை பண்ணையை அணுகி, செடி வளர்க்கும் முறையை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
முதலீடும் குறைந்த அளவே தேவைப்படும். தோட்டம் தொடர்பான அழகியல் உணர்வு இருந்தால் இத்தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்.
செடிகளை வளர்க்க 4 முதல் 5 சென்ட் இடம் தேவைப்படும். செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலைக்கூண்டு அமைக்க வேண்டும்.
இதற்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் செலவாகும். பனிக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம் செலவாகும். பூக்கும் செடிகளுக்கான மறைமுக வெயில் தரும் கூடாரம் ரூ.30 ஆயிரம் செலவாகலாம்.
150 பூந்தொட்டிகளுக்கும், பூச்செடிகளை வைப்பதற்கான பாலிதீன் கன்டெய்னர்களும் வாங்க ரூ.10 ஆயிரம் செலவாகும்.
இவை தவிர பாதுகாப்பு வேலி, மண் சமப்படுத்தும் கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், பைப் போன்ற செலவுகளும் உண்டு. தோராயமாக ரூ.2 லட்சம் வரை தேவைப்படும். இது அடிப்படை கட்டமைப்புக்கான முதலீடு.
குறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் கொண்டு பொதுவாக மக்கள் பயன்படுத்தக்கூடிய பூச்செடிகள், பழம் தரும் செடிகள், மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், நிழற்சாலை மரங்கள், வீட்டினுள் வைக்கக்கூடிய செடிகள், பூங்கொத்துச் செடிகள், புல் வகைகள் உள்ளிட்ட செடிகளை வாங்கி வளர்க்கலாம்.
மிக அதிக விலையுள்ள செடிகளை ஆர்டரின் பேரில் வாங்கி கொடுத்தால் போதும். 2 தொழிலாளர்கள் தேவை. செடிகள் டெலிவரி செய்ய சிறு வாகனம் ஒன்று இருந்தால் விரைவாக பணி நடக்கும்.
இத்தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்க்கும் செடிகளுக்கு சரியான பராமரிப்பு அவசியமாகும். சரியான நேரத்தில் தண்ணீர் தெளிப்பதும்,உரமிடுவதும் நிகழ வேண்டும். 25 தினங்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும்.
செடிகளில் ஈரப்பதம் எப்போதும் இருக்க வேண்டும். கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாக இருக்கும்.
நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.
இலைகள் மூலம் குறைந்த செலவில் தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்வோரும் உண்டு. ஒரு செடியில் உள்ள இலைகளைக் கொண்டே சுமார் 500 செடிகள் வரை உற்பத்தி செய்வது இந்த முறையில் சாத்தியமாகும், செடிகளிலிருந்து இலைகளை எடுத்து மண் நிரம்பிய பாலீதீன் பைகளில் போட்டு நிழற் கூடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் இலைகளிலிருந்து வேர் துவங்கி 50 நாட்களில் செடி உற்பத்தியாகும்.
நர்சரிகார்டனில் செடிகள் மட்டுமின்றி தென்னை, மா, சப்போட்டா போன்ற மர நாற்றுக்களையும் வளர்த்தால் கூடுதல் வருமானம் பெறலாம்.
தேடிவரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் நேரடியாக தொடர்பு கொண்டு ஆர்டர் எடுத்து டெலிவரி செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும்.
குணா

Issues: