கொட்டிகிடக்கிடக்கிறது... சுயதொழில் வாய்ப்புகள்

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்துவார்கள். இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள்.
இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன.
இந்தியாவில் ஏராளமான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில் தொடங்கி இன்றைக்கு பெரும் தொழில் அதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் வேலைக்கு செல்லத்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. சுயதொழில் செய்து ஆண்களை போல பெண்களாலும் தொழில் அதிபராக உயர்ந்து சமூக அந்தஸ்தை பெற முடியும்.
சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த இடர்பாடுகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் தொழிலை முறையாக பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஓரளவு அனுபவம் கிடைக்கும். அத்துடன் நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் தங்களை முழுமையாக நம்ப வேண்டும். அதற்கான துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் பெண்களால் சுய தொழிலில் ஈடுபட முடியும். அத்துறைகள் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை வாரி வழங்குகின்றன. அவை என்ன என்பதை பார்ப்போம்.
கம்ப்யூட்டர் ஹார்டுவேர்டு ஏற்றுமதி, மல்டிமீடியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் உற்பத்தி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை, பிளாஸ்டிக் உற்பத்தி, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, உணவு பதப்படுத்துதல், பூ அலங்காரம், வீட்டு அலங்காரம், மூலிகைகள் தயாரித்தல், மூலிகைகளை விற்பனை செய்தல், கல்வி மையங்கள் நிறுவுதல், இயற்கை உரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான சுய தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கு இன்றைக்கு கொட்டிக் கிடக்கின்றன.
இத்தொழில்களை எல்லாம் ஏராளமான பெண்கள் செய்து நிறைய வருமானம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு சுயதொழில் தொடங்க பட்டப்படிப்பு எல்லாம் தேவையில்லை. பட்டப்படிப்பு இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்று பல பெண்கள் தவறான கருத்தை கொண்டு இருக்கின்றனர்.
ஓரளவு எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. சுய தொழில் செய்வதற்கு தொழில் சார்ந்த அறிவும், நிர்வாக திறமையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும்தான் அவசியமான தேவைகள்.

Issues: