வருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்!

காளானுக்கு இன்றைய நிலையில் மிகப்பெரும் மவுசு கூடியிருக்கிறது. ஸ்டார் ஓட்டல்களின் மெயின் மெனுவில்கூட காளான் உணவுகள் இடம் பிடிக்கிற அளவுக்கு அதன் மகத்துவம் பெருகியிருக்கிறது. அசைவம் சாப்பிடாத சைவ பிரியர்களுக்கு அசைவ சுவையைஅளிக்கும் அற்புதமான சைவ உணவாக காளான் இன்றைக்கு திகழ்கிறது.

நாக்கிற்கு நல்ல சுவையையும், உடலுக்கு நல்லசத்தையும் தரும் காளானில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவில் உள்ளன. தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர், பொட்டாசியம் போன்ற சத்துகளும் இதில் இருக்கின்றன.

பல்வேறு சத்துக்கள் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு முழுமையான சரிவிகித உணவாக காளான் திகழ்கிறது. இது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது . எனவேதான் அசைவப்பிரியர்களும் விரும்பும் உணவாக
காளான் மாறியிருக்கிறது.

காளானில் பட்டன் காளான், பால் காளான், சிப்பிக் காளான் என பலவகைகள் இருக்கின்றன. இதில் சிப்பிக் காளான் வளர்ப்பது சுலபமானது. அதிக முதலீடு இல்லாமல், விரைவில் தொழில் தொடங்க எண்பவர்கள் காளான் வளர்ப்பு தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த காளான் வளர்ப்பு தொழிலை மேற்கொள்பவர்கள், எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்பது காளான் வளர்ப்பு தொழிலில் உள்ள
சிறப்பம்சம்.

வளர்ந்த நாடுகளில் காளான் வளர்ப்பு தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. அதற்கு காரணம் வர்த்தக அந்தஸ்தை இத்தொழில் பெற்றிருப்பதுதான். வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இத்தொழில் இப்போதுதான் பிரபலமடைய தொடங்கியிருக் கிறது.

நூற்றுக்கணக்கா வகைகளைக் கொண்டிருக்கும் காளான்களில் மக்கள் பெரும்பாலும் சாப்பிடுவது பட்டன் காளான், சிப்பிக்காளான், பால் காளான்ஆகிய மூன்று வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிர தேசங்களில்
மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக் காளான், பால் காளான் இவற்றை சாதாரணமாக
எல்லா இடங்களிலும் விளைவிக்கலாம்.

இங்கு சிப்பிக்காளான் உற்பத்தி குறித்து பார்ப்போம்.
சிப்பிக்காளான் கடல் சிப்பியை போன்றுதோற்றமுடையதாய் இருப்பதால் இந்த பெயர் வந்தது. தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். சிறந்த மூலப்பொருட்கள், சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசியமானதாகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வைக்கோல் தயாரிப்பு

காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ.நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி நேரம் வரை நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட்டு எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.

காளான் படுக்கை தயாரித்தல்

பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப்படவேண்டும். பாலிதீன் பையின்
அடிப்பகுதியை சணலால் கட்டி அதைஉள்பக்கமாக திருப்பிவிட வேண்டும். பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும்.பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும். பாலிதீன் மையப்பகுதியில் 5-10 துளைகள் போடவேண்டும்.

காளான் வித்து பரவும் முறை

மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும். படுக்கையில்
பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள் ஆகும்.பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு
மாற்ற வேண்டும்.

காளான் அறை

காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும். அறையின் வெப்பநிலையும், ஈரப்பதத்தையும் சரியான அளவில் பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

காளான் அறுவடை

காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும். இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் கிடைக்கும். காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர் மாதம் 2 ஆயிரம் கிலோ உற்பத்தி செய்து ரூ 2 லட்சம் வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது.

எவ்வளவு வளர்க்கிறோமோ அதற்கேற்ற வருமானம் இதில் கிடைக்கும். வீட்டிலிருந்தபடியே வருமானத்தை பெருக்கிக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தொழிலாகும்.

ரமேஷ்

Issues: